

மகுடஞ்சாவடி,
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் செயல்பட்டு வரும் சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளையின் இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 மாணவர்கள், ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி அளித்து வரும் இந்த மையத்தின் முயற்சிக்கு, இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வு மூலம் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்துள்ளது. 6 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
ஆகஸ்டு 13-ந் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீட் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், கியூரி மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், தனது ஓராண்டு கடின உழைப்பை நினைவு கூர்ந்து கூறியதாவது:-
அன்றிரவு அனைத்து பரபரப்பும், உற்சாகமும் அடங்கியிருந்தது. இரவு தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. நகரமும் அடுத்த நாளை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் எனக்கும், எனது ஆசிரியர்களுக்கும், அந்த 6 மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் அது ஒரு வருட கால அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம், பலமுறை கைவிடலாம் என்ற நிலை, பகிர்ந்துகொண்ட போராட்டங்கள் மற்றும் கனவுகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்தது.
எங்கள் கிராம வீடுகளில் இருந்து மகுடஞ்சாவடி வகுப்பறைகளுக்கும், அங்கிருந்து மருத்துவக் கல்லூரிகளின் நடைபாதைகளுக்கும், விரைவில் மருத்துவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வுக்கும் செல்லும் இந்தப் பயணம் உண்மையிலேயே அற்புதமானது.
எனது மகன் நிரஞ்சன் நீட் தேர்வு எழுதிய 2024-ம் ஆண்டில் இந்த இலவச நீட் பயிற்சி மையத்தை தொடங்கினேன். சிலுவம்பாளையம், கவுண்டனேரி, வெள்ளந்திவலசு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
“ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி மருத்துவராக மாறும்போது, அந்த குடும்பத்திற்கு அதன் அர்த்தமே தனி. ‘என் பையன், பொண்ணு டாக்டர்’ என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது அந்த குடும்பத்திற்கு சமூக மரியாதை, கண்ணியம், வேலைவாய்ப்பு உறுதி ஆகியவற்றை அளிக்கிறது. அடுத்த தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தையும் நம்பிக்கையையும் இது மிகப்பெரிய அளவில் மாற்றுகிறது.
இந்த மையத்தில் பயின்ற பல மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் வரை பயணம் செய்து வகுப்புகளுக்கு வந்தனர். வகுப்புகள் முடிந்த பிறகு வீட்டிலும், விவசாயப் பணிகளிலும் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் படிப்பைத் தொடர்ந்தனர்.
அவர்களிடம் திறமையோ, ஆர்வமோ இல்லாதது பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அருகில் பயிற்சி மையம் இல்லாதது, பயிற்சிக் கட்டணத்தை செலுத்த முடியாதது, தமிழில் போதுமான புத்தகங்கள் கிடைக்காதது உள்ளிட்டவை தடையாக இருந்தன. குறிப்பாக மாணவிகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்வதற்கான குடும்ப ஆதரவு குறைவாக இருந்ததால், அவர்களுக்காக பயிற்சி மையத்தில் விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு மாணவரின் தேவைக்கும் ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டது. “நாங்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கைப் பயணத்தையும் புரிந்துகொண்டோம்.
அவர்களின் பயம், குறைகள், கற்றல் திறன் ஆகியவற்றை புரிந்துகொண்டு, தமிழ்வழி அல்லது ஆங்கிலவழி மாணவர் என்பதற்கேற்ப தனித்தனி படிப்பு திட்டங்களை ஆசிரியர்கள் உருவாக்கினர். வாராந்திர தேர்வுகள், விடைத்தாள் கலந்துரையாடல்கள், புதன்கிழமை மாலை ஆன்லைன் வீடியோ சந்திப்புகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் மற்றும் தினசரி கால அட்டவணை ஆகியவை பயிற்சியின் முக்கிய பகுதிகளாக இருந்தன.
இந்த மையத்தில் பயின்ற சில மாணவர்கள் 4 அல்லது 5 முறை நீட் தேர்வு எழுதியுள்ளனர். எம்.பி.பி.எஸ். இடத்தைப் பெற வேண்டும் என்ற தங்கள் கனவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஏற்கனவே நர்சிங் படிப்பை முடித்திருந்த ஒரு மாணவியும், மருத்துவராக வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்றுவதற்காக மீண்டும் பயிற்சி மையத்திற்கு வந்து நீட் தேர்வுக்குத் தயாரானார்.
தமிழ்வழியில் படித்த ஒரு மாணவி, மொழிப் பிரச்சினையைப் பற்றி கூறியபோது, “கேள்வி புரிந்தால் தானே பதில் சொல்ல முடியும், மேடம்” என்று தெரிவித்தார். “பொருளாதார இடைவெளியை கருத்தில் கொண்டால், இது சமமான நிலையில் எழுதப்பட்ட தேர்வு அல்ல. தேர்வு அனைவருக்கும் ஒன்றுதான். அழுத்தங்களும் ஒன்றுதான். சில நேரங்களில் அவர்களுக்கு இன்னும் அதிகமாக இருந்தது.
ஆனால் மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்ட கனவும், தங்களுக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற தீவிரமான விருப்பமும்தான் அவர்களை இறுதிவரை அழைத்துச் சென்றது. அந்த முடிவு உண்மையில் மற்றொரு புதிய தொடக்கமாகும்.
“இந்த மாணவர்கள் நிச்சயம் மற்றவர்களுக்கு உதவுவார்கள்”
“மகுடஞ்சாவடி வகுப்பறைகளில் இருந்து மருத்துவக் கல்லூரிகள் வரை இந்த மாணவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் தாங்கள் பெற்ற உதவியை மற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று நம்புகிறேன். இன்று தொடங்கியுள்ள இந்தச் சிறிய அலை, நாளை பலரின் கனவுகளை மருத்துவர்களாக மாற்றும் மிகப்பெரிய அலையாக மாறும்.
இந்த இலவச நீட் பயிற்சி முயற்சிக்கு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு அடிப்படையில் ஆதரவு வழங்கிய கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கல்வி ஆலோசகர்கள் சதீஷ் மற்றும் ராஜேஷ், இயற்பியல் ஆசிரியர் செந்தில், வேதியியல் ஆசிரியர் சக்திவேல், உயிரியல் ஆசிரியர் திலகம், ஒருங்கிணைப்பாளர் அருண் தங்கராஜ் மற்றும் தட்டச்சர் சுகன்யா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர்கள் அனைவரும் இந்த முயற்சியின் முதுகெலும்பாக இருந்தனர். ஒரு மாணவரின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மற்றும் பிற பொருளாதார தடைகளால் பாதிக்கப்படாமல் மருத்துவக் கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
2024-ம் ஆண்டு கங்கா மருத்துவமனைகளால் தொடங்கப்பட்ட இந்த மையத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி, படிப்பு உபகரணங்கள், வழிகாட்டுதல் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
காயத்ரி அனந்தகிருஷ்ணன், டாக்டர் சண்முகநாதன் மற்றும் கனகவல்லியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு: சண்முகநாதன் கனகவல்லி அறக்கட்டளை, 3/285, எம்.ஜி.ஆர். நகர், மகுடஞ்சாவடி, சிங்ககிரி, சேலம் – 637103. தொலைபேசி: 9362525262.