கர்நாடகா வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் சுட்டுக் கொலை - சி.பி.ஐ. கண்டனம்

வனத்துறையினர் தங்களது கொலைக் குற்றத்தை திசை திருப்ப அவர்கள் வேட்டையாடினார்கள் என குற்றச்சாட்டை சுமத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் சுட்டுக் கொலை - சி.பி.ஐ. கண்டனம்
Published on

சென்னை,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மூன்று விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுட்டுக் கொலை

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வனப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகிய மூவரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது.

பொய்யான குற்றச்சாட்டு

வனத்துறையினர் தங்களது கொலைக் குற்றத்தை திசை திருப்ப அவர்கள் வேட்டையாடினார்கள் என பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். இந்த கொலையை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இக்கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கர்நாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

உரிய நிவாரணம்

கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். இக்கொலை குறித்து, தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com