நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறிப்பு

சென்னையில் நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நடைபயிற்சி சென்றபோது பெண்ணின் மீது முட்டையை வீசி நகை பறிப்பு
Published on

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 58). இவர், நேற்று காலை வீட்டின் அருகே நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 2 பேர், கவிதா மீது கோழி முட்டையை வீசினார். இதில் அவர் நிலைதடுமாறினார். அப்போது மர்மநபர்கள் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இதேபோல் பெரம்பூர் மதுரை சாமி மடம் தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி துர்கா தேவி (31). நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் மின்ட் பெரம்பூர் வடக்கு நெடுஞ்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், துர்கா தேவி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர். இதுபற்றி செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com