‘யூ டியூபர்’ சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

தொழிற்சாலை பெண் ஊழியர்கள் 9 பேர் இறந்ததாக வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ‘யூ டியூபர்’ சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
‘யூ டியூபர்’ சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
Published on

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களை தொழிற்சாலை நிர்வாகம் சுங்குவார்சத்திரம், வடக்குப்பட்டு, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகளில் தங்க வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் ஜமீன் கொரட்டூர் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவால் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவர்கள் பூந்தமல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து கேள்வி எழுப்பி பெண் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருச்சியில் கைது

இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளராக இருக்கும் யூ டியூபர் சாட்டை துரைமுருகன் (வயது 35) என்பவர் தரமற்ற உணவு சாப்பிட்ட பெண் ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்ததாக செய்தி பதிவிட்டிருந்தார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதையடுத்து வதந்தி பரப்பியதாக சாட்டை துரைமுருகன் மீது திருவள்ளூர் தாலுகா போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சியில் இருந்த சாட்டை துரைமுருகனை திருவள்ளூர் தாலுகா போலீசார் கடந்த மாதம் 19-ந்தேதி கைது செய்து, திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இந்தநிலையில் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் பரிந்துரை செய்தார்.

அதை ஏற்று சாட்டை துரைமுருகனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் தாலுகா போலீசார், திருவள்ளூர் கிளை சிறையில் இருந்த யூ டியூபர் சாட்டை துரைமுருகனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com