செல்ல பிராணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் - விமானத்தில் நாயுடன் பயணித்த பெண்...!

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வர ரூ.2.5 லட்சம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்ல பிராணிக்காக ரூ.2.5 லட்சத்திற்கு டிக்கெட் - விமானத்தில் நாயுடன் பயணித்த பெண்...!
Published on

சென்னை,

நாய், பூனை போன்ற செல்ல வளர்ப்புப் பிராணிகளை விமானங்களில் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறது. இவை 5 கிலோ எடைக்கும் கீழ் இருந்தால் அவற்றை அதற்கான விசேஷ காற்றோட்ட வசதி உள்ள பையில் அடைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சரக்கு கேபின் மூலமாகவும் இவற்றை கொண்டு வரலாம். இதற்காக தனி டிக்கெட் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை அழைத்து வந்தார். இது அதிகமான முடிகளைக் கொண்ட மால்டீஸ் வகை நாய் ஆகும். அதை தன்னுடன் இருக்கையிலேயே அமர்த்திக் கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக அந்த பெண் விமானத்தின் சொகுசு இருக்கை கேபின் முழுவதையும் பதிவு செய்தார். இந்த கேபினில் மொத்தம் 12 இருக்கைகள் உண்டு.

ஒரு இருக்கைக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் ஆகும். 12 இருக்கைகளையும் பதிவு செய்ததால் அதற்காக மட்டுமே ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருந்தார். காலை 9 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் 11.55 மணிக்கு சென்னையில் தரை இறங்கியது. நாய்க்காக இவ்வளவு செலவு செய்தது விமான ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, விமானத்தில் எத்தனையோ பேர் நாய், பூனைகளையும் தங்களுடன் அழைத்து வருகிறார்கள். ஆனால் இவ்வளவு செலவு செய்து ஒட்டுமொத்த கேபினையும் பதிவு செய்ததை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறோம் என்று கூறினார்கள். இவ்வாறு அதிக செலவு செய்து நாயை அழைத்து வந்த அந்த பெண் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com