

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
சாதாரண நாட்களை விட அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அமாவாசை நாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து, பின்னர் ராமநாத சுவாமியை வழிபடுகிறார்கள். இதேபோல் விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், வார விடுமுறை தினமான இன்று ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். பக்தர்கள் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்கு ஒரு நபருக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தீர்த்தங்களில் புனித நீராடுவதற்கு வழங்கப்படும் டிக்கெட் சர்வர் திடீரென முடங்கியதால், பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் அனைவரையும் பொது வரிசையில் கோவில் நிர்வாகம் புனித நீராடுவதற்கு இலவசமாக அனுப்பி வைத்து வருகின்றது. டிக்கெட் சர்வர் சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் டிக்கெட் வழங்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.