

நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியில், தோடர் இனத்தை சேர்ந்த புஷ் தாள் குட்டன் (வயது 57) என்பவர் புலி தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காட்டு பகுதிக்குள் அவருடைய உடல் கிடந்துள்ளது.
அதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் காட்டு பகுதிக்குள் சென்றபோது புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உறுதியான காரணம் தெரிய வரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஊட்டி சுற்றுவட்டார கிராமங்கள் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும், பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.