அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு

அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும் என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடு கட்டாயமாக பின்பற்றப்படும். மதியம் 1-2 மணி, மாலை 4-6 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படும். கடைகளில் இருந்து உணவு வாங்கி வரும்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும்.

வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்தால் பாத்திரத்தில் எடுத்து வாருங்கள், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். மருத்துவமனையில் அதிக கூட்டம் இருப்பதால், அதை கட்டுபடுத்த நடவடிக்கை எடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் வருகிறது. அரசு மருத்துவமனை எல்லாம் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பு. அனைவரின் ஒத்துழைப்புடன் முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.

சுகாதாரத் துறையின் முதல் நோக்கம், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இரண்டாவது தான் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது; ஆரோக்கியம் சார்ந்த அனைத்து செய்திகளும் ஏழை, பணக்காரர் பாகுபாடு இல்லாம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்; மக்கள் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்கம் தள்ளிப்போகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மோதிரங்கள் 100 சதவீதம் தரமானவை. அனைத்து மோதிரங்களிலும் 916 ஹால்மார்க் முத்திரை இடம்பெறும். தங்கத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் இருக்காது.

பருவமழை துவங்க உள்ள நிலையில் டெங்கு சீசன் ஆரம்பிக்க போகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்களும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணியாளர்களிடம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மழைநீர் தேங்காத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். வீடு உட்பட எல்லா இடங்களிலும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com