திருநெல்வேலி: காணாமல் போன ரூ.18 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு- உரியவர்களிடம் எஸ்.பி. ஒப்படைத்தார்

திருநெல்வேலி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ள 100 செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆகும்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. முருகன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில், திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில் 100 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு, இன்று (24.07.2025) மாவட்ட எஸ்.பி.யால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த செல்போன்களின் மொத்த மதிப்பு ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 873 ஆகும். மேலும் காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ என்ற இணையதளம் இந்திய தொலைத் தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம் அல்லது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பதிவு செய்து புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் கொடுத்தபின் மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்படும். காணாமல் போன செல்போனை பயன்படுத்தி பல குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் தொலைந்த அல்லது காணாமல் போன செல்போன் குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால், தொலைந்து போன அல்லது உடனடியாக தவறவிட்ட செல்போனை மீட்க முடியும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது.






