திருநெல்வேலி: பழிக்குப்பழி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி: பழிக்குப்பழி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, கூனியூரில் கடந்த 2013-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில், நடந்த கொலை சம்பவத்தின் முன் விரோதம் காரணமாக, அதே ஆண்டு கூனியூரை சேர்ந்த அருணாச்சலம்(எ) குமார்பாண்டியன் (வயது 48) கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கின் புலன் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிமன்ற விசாரணை நடந்த காலகட்டத்திலேயே குற்றவாளிகளான ஆறுமுகநயினார், ஆறுமுகதாஸ் ஆகியோர் இறந்த நிலையில், இன்று பிற குற்றவாளிகளான சங்கர்(எ) பார்வதிசங்கர்(46), சரித்திர பதிவேடு குற்றவாளி அருணாச்சலம்(42), முருகன்(44), லெட்சுமணன்(44), ராஜேஷ்(எ) ராஜேஷ்கண்ணா(37) ஆகிய 5 பேருக்கும் எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி செல்வம் இன்று 5 குற்றவாளிகளுக்கும் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வந்த் அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் சேரன்மகாதேவி காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 71 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 25 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 22 நபர்களுக்கும், கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com