திருநெல்வேலி: தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது

தூத்துக்குடி கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவிகள் நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள பிரபல நடிகருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு சிறப்பு பயிற்சி பெற வந்திருந்தனர்.
திருநெல்வேலி: தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- டாக்டர் கைது
Published on

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் பிசியோதெரபி பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ளது. அந்த கல்லூரியில் பிசியோதெரபி படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதையடுத்து சுமார் 28 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அடங்கிய குழுவினர் கல்லூரி முதல்வர் தலைமையில் கடந்த 1-ந்தேதி நெல்லை மாவட்டம், வீரவநல்லூரில் பிரபல நடிகருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் 3 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்ற நிலையில் 7 மாணவிகளுக்கு மட்டும் நீச்சல் தொடர்பான கூடுதல் பிசியோதெரபி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்கள் வீரவநல்லூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று முன்தினம் அங்கு பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் டேனியல் என்பவர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். அப்போது கோவில்பட்டியை சேர்ந்த 18 வயதான மாணவிக்கு டேனியல் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். பெற்றோரிடமும் சொல்லவே, அவர்கள் வீரவநல்லூர் விரைந்து வந்தனர். தொடர்ந்து வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து டேனியல் கைது செய்யப்பட்டார். மேலும் பாலியல் தொல்லை அளித்த டாக்டரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல நடிகருக்கு சொந்தமான மருத்துவமனையில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் இந்த டாக்டர் அடிக்கடி மதுபோதையில் பணிக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தபோது அவர் மதுபோதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com