மாவட்ட ஆட்சியர்கள் , மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் , மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

ஒவ்வொரு முறை ஊரடங்கு முடியும் முன்பாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்தும், பல்வேறு புதிய தளர்வுகளை வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று(அக்.,28) ஆலோசனை நடத்த உள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com