மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. எனினும், தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

தற்போது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை திரும்பினாலும் இன்னும் ஒரு சில கட்டுப்பாடுகள் ஊரடங்கில் தொடர்ந்து அமலில் உள்ளது. அந்த வகையில் இன்னும் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மெரினா கடற்கரை உள்பட பொழுது போக்கு பூங்காக்களும் முழுமையாக திறக்கப்படவில்லை. 100 பேர்களுக்கு மேல் கூடும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

கொரோனா தொற்று தமிழகத்தில் தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த மாதம் மேலும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக அடுத்த கட்ட முடிவுகளை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி மாவட்டக் கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஊரடங்கை எவ்வாறு தொடரலாம்? கொரோனா மேலும் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? கொரோனா 2-வது அலை வீச எந்த அளவுக்கு சாத்தியம் உள்ளது? என்பது போன்ற அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com