ஓட்டலில் ஆர்டர் செய்த உணவில் புகையிலை: சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - உணவு பாதுகாப்புத்துறை விசாரணை

ஓட்டலின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
ஓட்டலில் ஆர்டர் செய்த உணவில் புகையிலை: சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - உணவு பாதுகாப்புத்துறை விசாரணை
Published on

கோவை,

கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். இவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் காலியானது. இதனையடுத்து ஜாஸ்மின் ஆன்லைன் மூலம் பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகலில் தயிர்சாதம், சாம்பார் சாதம், பேபி கார்ன் ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

அதன்பின்னர் உணவை அவரும் அவரது குழந்தையும் சாப்பிட தொடங்கினர். திடீரென உணவில் டீ தூள் போன்று பொட்டலம் ஒன்று ஸ்பூனில் தட்டுப்பட்டது. ஜாஸ்மின் அதனை எடுத்துப் பார்த்தார். அப்போது அது கூல் லிப் எனப்படும் புகையிலை என்பது தெரியவந்தது. இதனை பார்த்து ஜாஸ்மின் அதிர்ச்சியடைந்தார்.

உணவை சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக அவர் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருந்தது.

உணவில் புகையிலை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு 10 முறைக்கும் மேல் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது போன்று அலட்சியமாக உணவு விநியோகம் செய்யும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியானதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தராஜன் தலைமையிலான அதிகாரிகள் புகையிலை கலந்த உணவை கொடுத்த உணவகத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் சுகாதாரமற்ற முறையில் பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணியுமாறும், கடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உரிமையாளருக்கும் அறிவுரை வழங்கினர்.

மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விநியோகிக்கப்பட்ட உணவில் புகையிலை எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரித்தனர்.மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுதவிர கடையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com