நாளை கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் தென்மண்டல ஐஜி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசனை

திருச்செந்தூரில் 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை (7.7.2025) நடைபெறுவதை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில், திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் முன்னிலையில் இன்று (6.7.2025) திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் திருநெல்வேலி நகரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள், 73 ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள், 87 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.க்கள், ஏ.டி.எஸ்.பி.க்கள், ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.