

கோபிசெட்டிப்பாளையம்,
கோபிசெட்டிப்பாளையம் அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து மகிழ்வார்கள்.
குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். நேற்று முன்தினம் தேர்தலையொட்டி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்று காலை 11.30 மணிக்கு கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னறிவிப்பின்றி திடீரென கொடிவேரி அணை மூடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அங்கு அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.