அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்:சேலத்தில் 'ஆட்டோ நகரம்'லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்:சேலத்தில் 'ஆட்டோ நகரம்'லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் எதிர்பார்ப்பு
Published on

சேலம்

சேலத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் நவீன வசதிகளுடன் ஆட்டோ நகரம் திட்டம் செயல்படுத்தப்படுமா? என்று லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

லாரி போக்குவரத்து

தமிழகத்தில் நாமக்கல்லுக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் தான் அதிகளவில் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பிரதான தொழில்களில் லாரி போக்குவரத்து தொழில் முக்கிய பங்காற்றி வருகிறது. சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், கல் மாவு, ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அதேபோல், வடமாநிலங்களில் இருந்து பருப்பு, பூண்டு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகை பொருட்களும் சேலத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. இதனை நம்பி லாரி டிரைவர்கள், கிளீனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், புக்கிங் ஏஜெண்டுகள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

லாரி மார்க்கெட்

சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன. ஆனால் லாரிகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை என்று பல ஆண்டுகளாக லாரி டிரைவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் பெரும்பாலான லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆனால் இந்த லாரிகள் நிறுத்துமிடத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதிகள் எதுவும் இல்லை. ஏற்கனவே உள்ள சுகாதார வளாகமும் பூட்டியே கிடக்கிறது. இதனால் டிரைவர்கள், கிளீனர்கள் அவசரத்திற்கு கூட அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆட்டோ நகரம்

இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் அனைத்து வசதிகளுடன் லாரி மார்க்கெட் அதாவது ஆட்டோ நகரம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் பிரதான கோரிக்கையாகும். ஆனால் இத்திட்டத்துக்கான ஆயத்தபணிகள் கூட இதுவரை நடைபெறாததால், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, ஆட்டோ நகரம் அமைக்கும் திட்டத்தை விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியதாவது:-

இடம் தேர்வு செய்ய வேண்டும்

சேலத்தில் நவீன வசதிகளுடன் லாரி நிலையம் அமைக்க வேண்டும் என்பது 15 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதனை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களது கோரிக்கை நிறைவேற்றாமலே உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் சேலத்தில் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com