காஞ்சிபுரத்தில் சோகம்: கிரிக்கெட் பந்து தலையில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

கிரிக்கெட் விளையாடச் சென்ற 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் சோகம்: கிரிக்கெட் பந்து தலையில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக வந்த பந்து தலையில் பலமாக தாக்கியதில் 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிரிக்கெட் விளையாடியபோது விபரீதம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள என்.ஜி.ஓ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகிர்தா லட்சுமி. இவரது 11 வயது மகன் சாய் மோத்தீஸ்வரன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 26-ம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க விளையாட்டு மைதானத்தில் சாய் மோத்தீஸ்வரன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

தலையில் பலமாக தாக்கிய பந்து

மைதானத்தில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சாய் மோத்தீஸ்வரனின் தலையில் பலமாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து, சிறுவனை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சாய் மோத்தீஸ்வரன், திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிரிக்கெட் விளையாடச் சென்ற 11 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com