

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நீலாவதி. மகள்கள் சஞ்சனா (வயது 21). சோனியா (19). ஈரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சஞ்சனா இறுதி ஆண்டு படித்து வருகிறார். சோனியா தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம் வீட்டில் இருந்த சோனியா வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ராஜாவும், நீலாவதியும் வீட்டில் ஒரு வேலை செய்யாமல் இருக்கிறாயே என்று கண்டித்துள்ளனர்.
இந்தநிலையில் பெற்றோர் திட்டியதால், ஆத்திரமடைந்த சோனியா வீட்டில் இருந்த அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.
பெற்றோர் நீண்ட நேரம் கதவை தட்டிப்பார்த்தும் சோனியா கதவை திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் விட்டத்தில் சேலையால் சோனியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. அதைப்பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்து உடனே சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.