

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் காலனியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 38). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பாக்யமேரி என்ற மனைவியும் ஜெயக்குமார் (13) என்ற மகனும் உள்ளனர். ஜெயக்குமார் பெரியகளக்காட்டூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பாலச்சந்திரன் தனது மனைவி பாக்கியமேரி, மகன் ஜெயக்குமார் ஆகியோருடன் பெரியகளக்காட்டூரில் உள்ள தனது வீட்டில் இருந்து சின்னம்மாபேட்டை பஜார் வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே எதிரே வந்த மண் லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியதில் 3 பேரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் லாரியின் பின்சக்கரம் மாணவன் ஜெயக்குமார் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலச்சந்திரன், பாக்கியமேரி ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மாணவன் ஜெயச்சந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாய், தந்தை கண் முன்னே மகன் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.