

ராயபுரம்,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான டி.டி.வி.தினகரன், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, கண்ணகி நகரில் நடந்த மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
ஆர்.கே.நகரில் எனது வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயத்தை மக்கள் தொடங்கி உள்ளனர். அண்ணா தி.மு.க.வை தொடங்கியபோது ராயபுரம் ராபின்சன் பூங்காவில்தான் தனது அத்தியாயத்தை தொடங்கினார். என் மீது நம்பிக்கை வைத்து 3-வது அத்தியாயத்தை ஆர்.கே.நகர் மக்கள் தொடங்கி இருக்கிறார்கள்.
புதிய கட்சி பெயர்
நான் புதிதாக தொடங்க இருக்கும் கட்சிக்கு 3 பெயர்களை பரிசீலிக்க தேர்தல் கமிஷனில் கொடுத்து இருக்கிறோம். அதில் இன்று(அதாவது நேற்று) தேர்தல் கமிஷன் முடிவு எடுப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
விரைவில் கட்சி பெயர் பற்றி தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும். கட்சியின் பெயரை ஆர்.கே.நகர் தொகுதியில் வைத்து அறிவிப்பேன். அதன் தொடக்க விழாவும் இங்குதான் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வீடியோவை எடுத்தது எனக்கு தெரியாது. அதை வெற்றிவேல் வெளியிட்ட பின்னர்தான் அதுபற்றிய தகவல் எனக்கு தெரியும்.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு மந்தமாக செயல்பட்டு வருகிறது. காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்றுத்தர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். தமிழக அமைச்சர்கள் சம்பந்தமான ஒரு ஊழல் பட்டியலை விரைவில் வெற்றிவேல் வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.