

சென்னை,
அரசு கேபிளை முடக்க தவெக அரசு முயல்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, அரசு கேபிள் டிவி சேவை முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, அரசு முறையாகச் செலுத்தாத காரணத்தால், கடந்த ஒரு வாரமாக சர்வர் முடக்கப்பட்டு செட்டாப் பாக்ஸ்களை (Set-top boxes) ரீசார்ஜ் செய்ய முடியாமலும், புதிய இணைப்புகளைப் பெற இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் நிறுவனத்தை, தவெக அரசு தனது மெத்தனப் போக்கால் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அரசு நிறுவனத்தைச் சீரழிப்பதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் பிற தனியார் நிறுவனங்களுக்குத் தவெக அரசு மறைமுகமாகத் துணை போகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும்படியான திட்டத்தை யார் கொண்டு வந்திருந்தாலும் அதனைத் தங்குதடையின்றித் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக முதல்-அமைச்சர் விஜய் இப்பிரச்சினையில் தலையிட்டு, நிலுவைத் தொகையைச் செலுத்தி அரசு கேபிள் டிவி சேவையைச் சீரமைத்து, 12 லட்சம் சந்தாதாரர்களின் உரிமையையும், சிறு ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.