

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளின்போது சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாக் கும் வகையில், பாரதிய நாகரிக பாதுகாப்பு சட்டம் பிரிவு 163-ன் கீழ் மாவட்ட நிர்வாகத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் குருபூஜை உள்பட தலைவர்களின் நினைவு நாள், பிறந்த நாள், குருபூஜை நிகழ்வுகளின்போது அதிகளவில் தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வருவார்கள். வழித்தடங்களில் இடையூறுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சி னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையும், அடுத்த மாதம் 9-ந்தேதி அன்றும், 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையும் பிறந்தநாள், நினைவு நாள் மற்றும் குருபூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தொண்டர்களை ஏற்றிக் கொண்டு பிற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் அனைத்து வகையான வாடகை, சுற்றுலா வாகனங்கள், ஆம்னி பஸ்கள், தற்காலிக, சிறப்பு அனுமதி பெற்ற வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ நுழைவது தடை செய்யப்படுகிறது.
மேலும், வரும் 5-ந்தேதி (நாளை மறுநாள்) முதல் 2 மாத காலத்திற்கு, முன் அனுமதியின்றி 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துதல், ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளின்போது ஜோதி எடுத்துச்செல்வதும் தடை செய்யப்பட்டு உள்ளது. நிகழ்வு நடைபெறும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் மட்டும், மாவட்ட நிர்வாகத்தின் முன்அனுமதியுடன் ஜோதி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படும்.
தனிப்பட்ட வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவுகளை முழுமையாக கடைப்பிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.