

சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் செவ்வாடை பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை மும்முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊஞ்சல் உற்சவத்தில் தேவபாண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.