

சென்னை,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பிற நாடுகளிடம் தற்காப்புத் தளவாடங்களுக்காகக் காத்திருந்த காலத்தைத் தடம் மாற்றி, இன்று உலக நாடுகளுக்கே பாதுகாப்பு அரண்களைத் தயாரித்து வழங்கும் பேராற்றலாக நமது அன்னை பாரதம் வீறுநடை போடுகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளது.
2013-14ம் ஆண்டில் வெறும் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்புத்துறை ஏற்றுமதி, இன்று ரூ.38,424 கோடியாக உயர்ந்துள்ளது. இது சுமார் 5,500 சதவீதத்திற்கும் மேலான வரலாற்றுச் சாதனையாகும். ‘இந்தியாவிலேயே தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் இத்தகைய சாதனை சாத்தியமாகியுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.8.75 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து, உலக அரங்கில் இந்தியா தனது பலத்தை நிரூபித்து வருகிறது. இது வெறும் வணிகம் மட்டுமல்ல; தற்காப்பில் தன்னிறைவு பெற்று உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளதன் கம்பீர அடையாளம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.