செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
x

சென்னை புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியில் கழிவுநீர் விடுவிப்பதைத் தடுக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "மறைமலைநகர் பகுதிகளில் 33 நீர் நிலைகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது, 2.20 எம்எல்டி கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. மேலும், 37 கோடி செலவில் 15.92 எம்எல்டி கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி, மறைமலைநகர் நின்னக்கரை ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு பட்டியலிட்டு கூறியதாவது:

சென்னை மாநகர் பகுதி தவிர்த்து சென்னை புறநகர் பகுதிகளில் 3,898 நீர் நிலைகள் உள்ளது. இதில் தாம்பரம் பகுதிகளில் 211 கோடி செலவில் தற்போது பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் 780 கோடி செலவில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர்த்து செங்கல்பட்டு பகுதியில், 76.26 கோடி, மதுராந்தகம் பகுதியில் 9.50 கோடி, மறைமலைநகர் பகுதிகளில் 300.57 கோடியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே நீர் நிலைகளுக்கு செல்லும். எனவே நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story