

சென்னை,
சென்னையில் 2-வது விமான நிலையமாக காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை அருகே அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்காக பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகத்தின் (TIDCO) விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு செய்வதற்கான எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.