

கோவை,
தமிழ் நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் பிரசார பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் 18 உறுப்பு மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளுக்கு வாக்குப்பதிவு அடுத்த நாளான ஏப்ரல் 24 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகம், தேர்தல் நாள், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை தொடர் விடுமுறையாக உறுதிப்படுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக விடுதியில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர் எவ்வித சிரமமின்றி தங்கள் தொலைதூரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு சென்று வாக்கு செலுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 24-ம் தேதி விடுமுறையை மாற்று நாளில் வேலை நாட்களாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் எனவும், செயல்படுத்த தவறினால், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் ஏதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.