நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாளையும் மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 8 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகள் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளது.

தேர்தல் அலுவலர்கள் நியமனம்

இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எங்கெங்கு வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அந்தந்த பகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, வேட்பு மனுக்களை பெறுவதற்கு தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் வேட்பு மனுக்களை அளிக்கலாம்.

நாளையும் மனு அளிக்கலாம்

பொங்கல் பண்டிகையின்போது 17-ந் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 29-ந் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாளை (சனிக்கிழமை) வேலை நாள் என்பதால் நாளையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com