மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

மருத்துவமனைகளில் உள்ள தடுப்பூசி மையங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை வழக்கறிஞர் சார்பில் ஆஜரான ஆர்.சண்முகசுந்தரம், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 50,000 படுக்கைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மேலும் 6,000 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பு கூறுகையில், ஆக்சிஜன் ஒதுக்கீட்டின் அளவு 519 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான பிரதமர் நிவாரண நிதியின் கீழ் மாநிலங்கள் நிதி கேட்டால் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து கூடுதல் இடங்களில் கிடைப்பதாக செய்தித்தாள்களில் படித்ததாகவும், தடுப்பூசிக்கு சர்வதேச டெண்டர் ஏதும் தமிழக அரசு வெளியிட முடிவு செய்துள்ளதா என்பது குறித்து நாளை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி மையங்களை அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியது. கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி செலுத்துபவர்கள் மருத்துவமனைகளுக்கு வர அஞ்சுவதால், தடுப்பூசி செலுத்தும் மையங்களை வேறு இடங்களில் அமைக்கலாம் என்றும், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சிறப்பு வசதி செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com