

இயக்குனர் கவுதமன் - மல்லிகா தம்பதியின் மகள் பரஞ்சோதிக்கும், க. குணாநிதி என்பவருக்கும் நாளை புதுச்சேரி பட்டானூரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறுகிறது. இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு கவுதமன் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து இருந்தார்.
இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மு.க ஸ்டாலின் வருவதற்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்து இருந்தார். அதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வருகை தந்து இருந்தார். ஸ்டாலின் வருகை தந்ததை பார்த்ததும் எழுந்து நின்று சீமான் வரவேற்றார்.
தொடர்ந்து சீமானுடன் ஒரே சோபாவில் அமர்ந்து மு.க ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்தார். அருகிலேயே வைகோவும் அமர்ந்து இருந்தார். மூன்று அரசியல் தலைவர்களும் அருகருகே அமர்ந்து கொண்டு சிறிது நேரம் உரையாடினர். அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக பயணித்தாலும் சீமான் - ஸ்டாலின், சந்தித்து பரஸ்பரம் வணக்கம் செலுத்தியதோடு, ஒரே சோபாவில் அமர்ந்து பேசியது அரசியல் நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக இருந்தது.