திருத்தணி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 30 பேர் காயம்

திருத்தணி அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து 30 பேர் காயம் அடைந்தனர்.
திருத்தணி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 30 பேர் காயம்
Published on

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் பகுதியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெண் பணியாளர்கள் நிறுவன வேன் மூலம் வீட்டிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல், வேலைக்கு சென்ற பெண்கள் மாலை வேனில் 45 பேர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். வேனை விஜி (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த வேன் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி வழியாக கீழாந்தூர் நோக்கி சென்றபோது சாலை வளைவில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com