வாரிசு சான்று வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. கைது..!

திண்டுக்கல்லில் வாரிசு சான்று வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டுள்ளார்.
வாரிசு சான்று வழங்க லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ. கைது..!
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகில் உள்ள சீலப்பாடியை சேர்ந்த வரதராஜ் மனைவி அன்னலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரதராஜ் இறந்துவிட்டார். இதனைதொடர்ந்து தனக்கு வாரிசு சான்று வழங்ககேட்டு அடியனூத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் அன்னலட்சுமி கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி மனு அளித்தார். ஆனால் அந்த மனுவின்மீது கையெழுத்து போடாமல் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம் இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் செந்தில்குமார் அன்னலட்சுமி வீட்டிற்கு வந்தார். அவரது பேரன் நாகராஜிடம் ரூ.2000 கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்று கிடைக்கும் என கூறியுள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டபோதும் பணம் கொடுத்தால் உடனடியாக வாரிசு சான்று கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னலட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது அறிவுரையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுக்க முயன்றபோது மறைந்திருந்த லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கீதா பழனிச்சாமி மற்றும் போலீசார் முருகானந்தத்தை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல அலுவலகத்திற்கு வரும் பலரிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எமக்கலாபுரத்தில் பணிபுரிந்த முருகானந்தம் கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் இங்கு பணியில் சேர்ந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com