வேங்கைவயல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளா..? – பா.ரஞ்சித் கேள்வி

கோப்புப்படம்
உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தர வேண்டும் என்று பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
வேங்கைவயல் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது..? வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. நேற்று (ஜன.24) சென்னை ஐகோர்ட்டில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20-ம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டதாகவும், அதில் மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. அம்மூன்று பேரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. இது திட்டமிட்டு செய்யப்படும் செயலாக தெரிகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத சி.பி.சி.ஐ.டி. அவசரகதியில் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சென்னை ஐகோர்ட்டு நியமித்த ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை சரிவர நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார் என்பதையும் நினைவு கூறுகிறோம்.
வழக்கு சம்பந்தமாக இரண்டு வருடங்களாக மாண்புமிகு சென்னை ஐகோர்ட்டு, சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை செல்லும் போக்கினை கடுமையாகக் கண்டித்து வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் குற்றவாளிகள் யார் என்று இனம் காணத் தெரியாத சி.பி.சி.ஐ.டி. இன்று திடீரென்று குற்றவாளிகள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று அறிவித்திருப்பதன் பின்னணி என்னவென்று புரியாமல் இல்லை.
இரண்டு வருடங்களாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி. இன்றைக்குத் திடீரென்று விழித்திருப்பதைப் பார்க்கையில், இவர்கள் யாருக்காகப் பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுகிறது. உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியைச் செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதிக்கப்பட்ட தலித் மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் இழிவுபடுத்தவும் அரசு துணிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது. மேலும், இந்த முடிவை தமிழக அரசும் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இவ்வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுத்தரவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அதில் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.