

மணல்மேடு:
அறிவு, ஞானம், கற்றல் மற்றும் இசையின் தெய்வமாகிய சரஸ்வதி தேவியை வழிபட உகந்த நாளாக சரஸ்வதி பூஜை போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் ஒன்பது நாள் முடிந்து பத்தாம் நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மணல்மேட்டில் உள்ள விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் மாணவர் சேர்க்கையும், 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை முன்பதிவும் நடைபெற்றது. மேலும், கல்விக்கடவுளான சரஸ்வதி தேவி படத்தின் முன்பு பேனா, பென்சில், பிஸ்கட், சாக்லேட், பழங்கள் உள்ளிட்டவைகள் வைத்து பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்தனர். தொடர்ந்து சரஸ்வதி தேவி முன்பு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நாக்கில் தேன் கொண்டு தங்க ஊசியால் எழுதினர். அது மட்டுமல்லாது நவதானியங்களில் 'ஓம்' என்றும், அகரவரிசை, சரஸ்வதி போன்ற எழுத்துக்களையும் எழுதினர். பின்னர் பூஜை செய்த பேனா, பென்சில் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.