

திண்டுக்கல்,
ஆசியாவில் தென்சீன கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டில் பல்வேறு தீவுகள், சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்களுக்கு இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் உள்பட 36 பேர் இன்று காலை பு குவாக் தீவுக்கு படகில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் 18 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை (திண்டுக்கல், சேலம், திருச்சி, தருமபுரி) சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் குமார், முருக பிரபு, ஸ்ரீதர், ஷேக் அப்துல்லா, பாலாஜி, வினய குமார், ரவி சங்கர், பாபு, சந்தோஷ் குமார் மற்றும் அழகு ராஜன் உள்ளிட்ட 10 தமிழர்கள் பலியாகி உள்ளனர்.
படகு விபத்தில் லாவா மொபைல் நிறுவன ஊழியர்கள் சிலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த வணிக செயல்பாட்டிற்காக செல்போன் கடை உரிமையாளர்கள், நிறுவன ஊழியர்கள் உள்பட சிலரை லாவா மொபைல் நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது. அவர்களும் இந்த படகு விபத்தில் சிக்கியுள்ளனர்.