"தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.." - பிரஷாந்த் கிஷோர்

த.வெ.க.வை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை விட நான் பிரபலம் ஆவேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.." - பிரஷாந்த் கிஷோர்
Published on

மாமல்லபுரம்,

தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், "தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும், தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். 2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்காளத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வு பெற்றுவிட்டேன். இங்கு த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை. நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூற வரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.

என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால் தான் நான் இங்கு வந்துள்ளேன். த.வெ.க. அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம். 35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்த இருக்கிறார். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்தாண்டு த.வெ.க. வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன். தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் தவெகவை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை

விட நான் பிரபலம் ஆவேன்" என்று அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com