விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் - சென்னையில் நாளை திறக்கப்படுகிறது

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் சென்னையில் நாளை திறக்கப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

சினிமாவில் சாதித்த நடிகர் விஜய், அரசியலிலும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார். தனது மக்கள் இயக்கத்தை, அரசியல் இயக்கமாகவே நடத்தி வருகிறார். அதேவேளை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதுவரை விலையில்லா விருந்தகம், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கான இரவு நேர பயிலகம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஏழை-எளிய மக்களின் நலனுக்காக இலவச சட்ட மையம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக இலவச சட்ட மையம் சென்னையில் திறக்கப்படவுள்ளது. இந்த மையத்தை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஏழை-எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிபடக்கூடாது என்ற அடிப்படையில், சென்னை கொடுங்கையூர் கே.கே.நகர் 6-வது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் 9-ந்தேதி (நாளை) மாலை 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் அப்பகுதி மக்கள் மாலை வேளைகளில் சட்ட ஆலோசனைகளை பெறலாம். இதுபோல சென்னையின் இதர பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இலவச சட்ட ஆலோசனை மையம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com