விஜயின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு

விஜயின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம் - முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தாக்கு
சிவசங்கர்
Published on

சென்னை,

கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும் என சிவசங்கர் கூறியுள்ளார்.

அரசு பணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான பணி ஆணை வழங்க இன்று கரூர் சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் திமுகவை பலமாக தாக்கி பேசிய நிலையில் இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-

திமுக மீது பழி

உங்கள் மீது உள்ள தப்பை எல்லாம் அழித்துவிட்டு கரூர் சம்பவத்தின் பழியை திமுக மேல் போட்டுள்ளீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்றும் மிகப் பெருந்தன்மையாக எங்கள் தலைவர் சொன்னார். காரணம் அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவருக்கும் உங்களுக்கும் எந்த விதத்தில் ஒப்பிட முடியும்.

கரூரை விட்டு ஓடியது யார்

கரூரை விட்டு ஓடியது யார் என்பது மக்களுக்கு தெரியும். அந்த முதுகு கரூர் மக்களுக்கு நினைவுச்சின்னமாக இருக்கும். நீங்களாக உங்களை பெரிய மனிதராக நினைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்களுடைய தலைவருடன் உங்களை ஒப்பிட முடியாது.

குற்றம் சுமத்த வேண்டும் என முடிவு செய்திருந்தால் குற்றம் சுமத்தியதோடு இருக்க முடியாது வழக்கே போட சொல்லி இருக்கலாம். வழக்கே போட்டு இருந்தால் என்ன நிலைமை என்று உங்களுக்கு தெரியும். பெருந்தன்மையாக ஒரு அரசியல் கட்சித் தலைவர் தன்னுடைய தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று சொல்லி பெருந்தன்மை காட்டியதால் இன்று நீங்கள் மனதில் பட்டதை எல்லாம், வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

திமுக ஆட்சி

அடுத்தது ஒரு வசனம் சொல்லி இருக்கிறீர்கள் ''எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலிகள், நிறையக் காயங்களை தாண்டி தான் வந்துள்ளேன். என் வாழ்வில் அதிக வலி காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான். மக்களை சந்திக்கவும் மக்களிடம் பேசவும் கருவூருக்கு வந்தேன்' என்று விஜய் சொல்லியுள்ளார். ஆனால் வந்தது எத்தனை நாட்கள் கழித்து? சம்பவம் முடிந்து 250 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுதுதான் திமுக ஆட்சி உங்களை கரூருக்கு செல்லவிடாமல் தடுத்தது என்றால், உங்கள் ஆட்சி அமைந்தே இரண்டு மாதம் ஆகிவிட்டது.

யோகிபாபு

நாளைக்கு யோகிபாபு போகும்போது கூட்டம்கூடி ஏதாவது நடந்தால் அதற்கு அரசுத் தரப்பில் இவர் செய்துவிடுவாரா? இடைத் தேர்தலுக்காகத்தான் கரூருக்கு சென்றிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.

துயரத்தில் இருந்ததாக கூறிய விஜய் திருமண விழாக்களில் மகிழ்ச்சியாக பங்கேற்றார்,

தன் தவறுகளை மறைத்துவிட்டு திமுக மீது குற்றம்சாட்டுகிறார் விஜய். இன்று நேரத்திற்கு சென்ற விஜய் பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றார்? தாம் முதல்-அமைச்சரையே மறந்துவிட்டு பேசுகிறார் விஜய்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com