கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - போலீசாருடன் வாக்குவாதம்

கும்மிடிப்பூண்டியில் சுடுகாட்டில் புதிய எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பணிகளுக்கு கிராம மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு - போலீசாருடன் வாக்குவாதம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் 15-வது வார்டுக்குட்பட்ட மேட்டுகாலனி பகுதியில் உள்ள ஜெயஸ்ரீநகரில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் எல்.பி.ஜி. எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தற்போது பேரூராட்சி நிர்வாகத்தால் தொடங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அந்த பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த இடத்திற்கு மாற்றாக அதே பகுதியில் பல தலைமுறையாக ஒரு சமூகத்தினரின் பயன்பாட்டில் மட்டுமே இருந்து வரும் சுடுகாட்டில் தற்போது எரிவாயு தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

கடந்த முறை போராட்டத்தின் ஈடுபட்டவர்களில் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த பிரச்சினை குறித்து பொன்னேரி உதவி கலெக்டர் தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மேற்கண்ட சுடுகாட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் நேற்று மேற்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் சுடுகாட்டின் வாசலில் இரும்பு தடுப்புகளை அமைத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனையறிந்து அங்கு வந்த கிராம மக்கள் சிலர், எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். குறிப்பிட்ட சமூகத்தினருக்கான சுடுகாட்டில் எரிவாயு அமைக்க கூடாது என அவர்கள் தாசில்தார் பிரீத்தி, பேரூராட்சி செயல்அலுவலர் யமுனா ஆகியோரிடம் முறையிட்டனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அதிகாரிகள், அரசு சார்ந்த திட்ட பணிகளை நிறுத்த முடியாது என திட்டவட்டமாக அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள், இப்பிரச்சினை தொடர்பாக வரும் காலகட்டத்தில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com