

விருதுநகர்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ந்தேதி, ஒரே கட்ட தேர்தலாக நடைபெறும். இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் கடந்த 15-ந்தேதி வெளியிட்டார். இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன்படி, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பறக்கும் படையில் உதவி காவல் ஆய்வாளர், காவலர், ஆயுதம் தாங்கிய காவலர் உள்ளிட்டோர் இருப்பர். பறக்கும் படையுடன் கண்காணிப்பு குழுவும் இணைந்து செயல்படும்.
இந்த நிலையில், விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி நகை கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு சென்ற ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக, தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, சாத்தூர் வெங்கடாசலபுரம் சோதனை சாவடியில் ரூ.90 லட்சம் மதிப்பிலான 77.42 சவரன் நகைகள் மதுரையை சேர்ந்த நகை வியாபாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்ததால் பறக்கும் படை நடவடிக்கை எடுத்துள்ளது.