

காசா நகரம்
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்களை படுகொலை செய்தும், பிணை கைதிகளாக சிறை பிடித்து சென்றதற்கும் பதிலடியாக, காசாவில் ஹமாஸ் அமைப்பினரை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வெளி தாக்குதலில் 2 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதனை பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், காசாவின் தெற்கு நகரான கான் யூனிசில் இருந்து மேற்கே முவாசி பகுதியில் முகாம் அமைக்கப்பட்ட பகுதியில் வாகனம் ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடந்தது.
இதில், 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் கான் யூனிஸ் நகரில் பாலஸ்தீனிய செம்பிறை சங்கம் நடத்தி வரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவிக்கின்றது. எனினும், இதுபற்றி உடனடியாக இஸ்ரேல் ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர், 2 சிறுவர்கள், 9 போலீஸ் அதிகாரிகள் உள்பட 13 பேர் பலியானார்கள்.