

சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யூசுப் சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகமது யூசுப் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது டுவிட்டரில், விசிக மாநில பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் காலமானார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. என்னைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டவர். என்மீது மாசிலா அன்பை பொழிந்தவர். மீண்டு வருவார் என நம்பியிருந்தேன். மனம் பதைக்கிறது. ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. அவருக்கு செம்மாந்த வீரவணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.