பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி-மயக்கம்

கண்டாச்சிபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Published on

திருக்கோவிலூர்

அங்கன்வாடி மையம்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கடையம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு கடையம் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குழந்தைகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தைகளுக்கு சமைத்த உணவை அங்கன்வாடி ஊழியர்கள் பரிமாறினர். அதை அவர்கள் ஆர்வமுடன் சாப்பிட்டனர். சில நிமிடங்களுக்கு பிறகு அந்த குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மொத்தம் 13 குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.

சிகிச்சை

உடனே அவர்களை அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோரும் சிகிச்சைக்காக பழைய கருவாச்சி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டாகள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே குழந்தைகளுக்கு சமைத்த உணவில் பல்லி விழுந்து இருப்பதை அறிந்த அங்கன்வாடி ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிவித்தனர். இதன் பிறகே பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

பரபரப்பு

பின்னர் குழந்தைகள் நலமுடன் இருப்பதை டாக்டாகள் உறுதி செய்ததை அடுத்து அவர்களை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் கடையம் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com