இட்லி-குருமா சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

திருச்சி தனியார் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விடுதி உணவுக் கூடத்திற்கு `சீல்' வைக்கப்பட்டது.
இட்லி-குருமா சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
Published on

திருச்சி தனியார் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விடுதி உணவுக் கூடத்திற்கு `சீல்' வைக்கப்பட்டது.

வாந்தி-மயக்கம்

திருச்சி ஏர்போர்ட் அருகே வயர்லஸ் சாலையில் ஆடம்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை உணவாக மாணவர்களுக்கு இட்லி - குருமா வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். இதில் 7 மாணவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

உணவுக் கூடத்திற்கு `சீல்'

இதைத்தொடர்ந்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில் நேற்று திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அலுவலர்கள் குழுவினர், பள்ளி விடுதி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த விடுதியில் உணவு கூடம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததும், உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இல்லாமல் செயல்பட்டதும் தெரியவந்தது. பின்னர் அந்த பள்ளி உணவகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்பிரிவு 56-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி உணவகத்தில் உணவு தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் விடுதி உணவு கூடத்திற்கு `சீல்' வைக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com