கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் ஏரியில் போதுமான நீர் இருப்பு இருந்ததால் கிருஷ்ணா நீர் பெறவில்லை. அதன் பின்னர் கோடை வெயில் காரணமாக ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் கடந்த மே 1-ம் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் 3-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. அதிகப்படியாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கடந்த மாதம் 25-ந்தேதி உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பது கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக் கொண்டனர். அதன்படி கடந்த 6-ம் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மே 3-ந்தேதியிலிருந்து கடந்த 6-ந்தேதி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 3.569 டி.எம்.சி.தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் தற்போது மழை இல்லாத காரணத்தால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 90 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரி நீர் மட்டம் 31.44 அடியாக பதிவானது. 2092 டி.எம்.சி. தண்ணீர் இருப்புள்ளது. பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 300 கனஅடி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதே போல் சென்னை குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர், மதகுகள் வழியாக வினாடிக்கு 70 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com