

சென்னை,
டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான செந்தில் பாலாஜி, பழனியப்பன், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.கே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன், உமா மகேஸ்வரி ஆகிய 19 பேரும் காலை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தனித்தனியே கடிதம் அளித்தனர்.
அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் எம்.எல்.ஏ. உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையின் எம்.எல்.ஏ. கருணாஸ் ஆகிய 3 பேரும் தங்களது ஆதரவு யாருக்கு என்று இன்னும் தெரிவிக்கவில்லை. அவர்கள் டி.டி.வி.தினகரன் பக்கம் சாய்ந்தால், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் குறைந்துவிடும். இந்நிலையில் அவர்கள் தொண்டர்களின் கருத்துகளை கேட்டு உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம் என எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அளித்து உள்ள பேட்டியில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்த கடிதமும் வழங்கவில்லை. இதேபோல் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரும் கடிதம் எதுவும் வழங்கவில்லை என தன்னிடம் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு வரும் சூழல் ஏற்பட்டால், தொண்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறிஉள்ளார்.