'தூய்மை மிஷன்'-ல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்படுவோம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

கோப்புப்படம்
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை மிஷனில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெற வேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது. விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை மிஷன்-ல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






