

மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் ஜெப பாஸ்டின்(வயது 29). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் கமலாபுரத்தை சேர்ந்த மரிய வெல்சியா(வயது 26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் நாளைய தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் இன்று காலை, மதுரையில் செவலியர் தேர்வு எழுதுவதற்காக ஜெப பாஸ்டின் இருசக்கரை வாகனத்தில் தனது வருங்கால மனைவி வெல்சியாவை அழைத்து சென்றிருக்கிறார். அவர்கள் வாடிப்பட்டி அருகே சானாம்பட்டி பிரிவில் சென்றபோது, கோவையில் இருந்து மதுரை சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் இளம்ஜோடி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணப்பெண் வெல்சியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜெப பாஸ்டின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.