பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு 'வாட்ஸ்-அப்' செயலி

தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதில் பள்ளிக்கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டு அதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற இணையதளம் வாயிலாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த எமிஸ் தளத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் எண் சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்களில் தற்போது உபயோகத்தில் உள்ள எண் எவை? என்பதை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதனால் பல சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனை சரிசெய்யும் விதமாக தற்போது செல்போன் எண் சரிபார்க்கும் பணிகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 5 லட்சம் செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றதும், பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை 'டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. வாட்ஸ்-அப் செயலி வாயிலாக இந்த தளத்தை செயல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அது சோதனை ஓட்டத்தில் இருக்கிறது. இந்த புதிய தளத்தில், ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com